நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 500 காசாக என்இசிசி விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், பண்ணைகளில் வியாபாரிகளுக்கு கடனாக முட்டையை விற்பனை செய்தால் 455 காசுக்கும், ரொக்கத்துக்கு விற்பனை செய்தால் 450 காசுக்கும் முட்டை விற்பனை செய்து பயனடையும்படி, என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் பண்ணையாளர்களை தினமும் வலியுறுத்தி வருகிறார். என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து அதிகபட்சம் 25 காசு தான், மைனஸ் விலையாக இருக்க வேண்டும் என பண்ணையாளர்கள், என்இசிசி, முட்டை வியாபாரிகள் இடையே, கடந்த சில மாதத்துக்கு முன் ஏற்பட்ட உடன்படிக்கை தற்போது காணாமல் போய்விட்டது. இதனால், என்இசிசி விலை ஒரு மாதிரியாகவும், பண்ணை விலை அதில் இருந்து 50 காசு குறைவாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, முட்டை விலை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை போக்க முடியவில்லை என பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் நாமக்கல் பகுதியில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில், ஒரு முட்டை 525 காசுக்கு தற்போது விற்பனையாகிறது.