மதுரை : எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனாவை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இதை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆண்டுதோறும் சித்தமருத்துவப் பிரிவுக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கூடிய சூழலில் முறையான ஆராய்ச்சி எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர், மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் கபசுர குடிநீர் கொரோனா நோய்க்காக வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள்,இது ஏன் மத்திய அரசால் இதுவரை அறிவிக்கப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மத்திய அரசு கொரோனா நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சூழலில், சித்த மருந்துகளை ஊக்குவிக்கலாமே? எனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும்
1. சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?
2. எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன..?
3. என்னென்ன நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்பது தொடர்பாகவும், எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கபசுரக் குடிநீர் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது? என்பது தொடர்பாகவும் மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..