கூடலூர்: தேக்கடியில் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுக்கின் நண்பர் வீடு, 135 ஆண்டுகள் ஆனாலும் தற்போது வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
முல்லை பெரியாறு அணை கட்டும் பணி கடந்த 1886ல் தொடங்கியது. அப்போது அணை கட்டுமான பணிக்காக பொறியாளர் கர்னல் பென்னிகுக், தனது நண்பரான மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான நாமுராவை தேக்கடிக்கு அழைத்து வந்தார். அவர் குடும்பத்துடன் வசிக்க குமுளி - தேக்கடி சாலையில் 6 அறைகள் கொண்ட வீட்டை பென்னிகுக் கட்டினார். இந்த வீட்டில் சுவர்கள் பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய சுருக்கி, சுண்ணாம்பால் கட்டப்பட்டது.
நாமுராவ் தனது மனைவி அனசூயா பாயியை அழைத்து வந்து இங்கு குடியேறினார். அவருக்கு பிறகு, அவரது மகன் நாராயணராவ், அவரது குடும்பத்தினர் இந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தனர். கடந்த 2005ல் நாராயண ராவ் இறந்தார். தற்போது அவரது மனைவி கிரிஜாபாய், மகன் வைதிஷ்ராவ் வசித்து வருகின்றனர். 135 ஆண்டு பழமையான வீட்டின் சுவர்கள் இன்னமும் பலமிக்கதாக உள்ளது. இந்த வீட்டில் சிறிது காலம் கிராம நிர்வாகம் அலுவலகம் செயல்பட்டு வந்ததால், உள்ளூர்வாசிகள் ‘கச்சேரி வீடு’ என்று அழைத்தனர். பின், கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்றியதால், ‘பழைய கச்சேரி வீடு’ என அழைக்கப்படுகிறது.