சத்தியமங்கலம்: சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரியம்மன் கோயில் அருகே இரு மாநில எல்லையில் காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 சோதனைச்சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வாகனத் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் வனத்தைவிட்டு வெளியேறிய ஒற்றை யானை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் சாலையில் நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட சோதனைச்சாவடி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலையின் நடுவே வந்து நின்ற ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை சுமார் அரை மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.