×

உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை :தொடரும் பலாத்கார சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தல்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் அடங்குவதற்குள் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் பலாத்கார சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கை, கால்கள் உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்தை வன்மையாக கண்டித்த எதிர்க்கட்சி தலைவர்கள்,  முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். ஹாடோய் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, இயற்கை உபாதையைச் கழிக்க சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் அவரை மீட்டதோடு போலீசிடம் ஒப்படைத்தனர். இதனிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதே போல் நொய்டாவில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்ற 2 பேர் அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். படுகாயம் அடைந்துள்ள அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கூட்டு பலாத்காரத்தில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிம்லாவில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாத யோகி ஆதித்யநாத் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Tags : girls ,incidents ,rape ,Yogi Adityanath ,Uttar Pradesh , Uttar Pradesh, Girls, Sexual Abuse, Yogi Adityanath, Insistence
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி