நாகை: ‘‘கூட்டணி அமைப்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கல்யாண வீட்டிற்கு சாப்பிட வந்தவர், அடுப்பை இடித்துவிட்டு வருவதுபோல் உள்ளது’’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்து உள்ளார்.நாகை நம்பியார் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளுக்கு விலையில்லா பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப 2021ல் நடைபெறும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
கல்யாண வீட்டிற்கு சாப்பிட வருபவர்கள் வீட்டில் உள்ள அடுப்பை இடித்து விட்டு வருவது இல்லை என்று அண்ணா கூறினார்,. எதற்கு அப்படி அவர் கூறினார். கல்யாண வீட்டிற்கு வருபவர்கள் ஒரு சாப்பாடு சாப்பிடுவார்கள். அதற்கு பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அடுப்பில் சமைத்து சாப்பிடுவார்கள். அதுபோல தான் எல்லா கட்சி கூட்டணியும், பாஜவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து கருத்து கூறியதும் அதுபோல தான். ஒவ்வொருவரும் தனது கட்சியை வளர்க்க ஒரு கருத்து சொல்வார்கள்.திமுகவில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது அவர்களது கருத்து சுதந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.