×

தீபாவளி பண்டிகை கூட்டநெரிசலை சமாளிக்க இன்றுமுதல் 80 % பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தியால் அரசு ‘பச்சைக்கொடி’

கம்பம்: தீபாவளி பண்டிகை நெரிசலைத் தவிர்ப்பதற்காக, வெளியூர் பஸ்களை இன்று முதல் 80 சதவீதம் அளவுக்கு இயக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்டி பஸ்களின் இயக்கமும் அதிகரிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின் படிப்படியாக மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை பிறப்பித்தது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தமிழக அரசும் ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியது. நான்காம் கட்ட தளர்வில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி செப். 1ம் தேதி முதல்  35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக செப். 7ம் தேதி முதல் 50 சதவீத பஸ்கள் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது மாவட்டங்களுக்கு இடையே 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையில், தொடர்ந்து விழாக்காலங்கள் வருவதால் பொதுமக்கள் வெளி இடங்களில் கூடுவது அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதியில் ஆயுதபூஜை உள்ளிட்ட விழாக்களும், அடுத்த மாதம் 14ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடை, நகை உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் அதிகளவு கடைகளுக்குச் செல்கின்றனர். இதனால், அரசு பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், கூட்டநெரிசல் அலைமோதுகிறது. இதனால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பலதரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. மேலும், கூட்டநெரிசலில் தினமும் பணிபுரிவது தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாக கண்டக்டர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களும் அதிருப்தி தெரிவித்தனர். பஸ் சர்வீஸ்களை அதிகரித்தால் மட்டுமே, அதிகரிக்கும் கூட்டநெரிசலை சமாளிக்க முடியும் என பொதுமக்களும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என தொடர்ந்து பண்டிகை வருவதால் தமிழக அரசு இன்று (அக். 8) முதல் மொபசல் (வெளியூர்) பஸ் சர்வீஸ்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்து இயக்க அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல, சிட்டி பஸ் சர்வீசையும் 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கவும் அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால், கூட்டநெரிசலை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், குறைந்தபட்சம் தீபாவளி முடியும் வரையாவது நூறு சதவீத பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். ‘‘மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக பொருட்கள் வாங்க நகரங்களுக்கு வருவார்கள். இதனால், தீபாவளி முடியும் வரை, பஸ்களில் கூட்டநெரிசல் கட்டுப்படுத்தமுடியாது. எனவே, குறைந்தபட்சம், தீபாவளி பண்டிகை முடியும் வரையிலாவது, நூறு சதவீதம் பஸ்களை இயக்கவேண்டும். அப்போதுதான், பஸ் பயணங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க முடியும்’’ என்கின்றனர்.

Tags : Government ,Diwali , Deepavali festival, 80% of buses, public, government ‘green flag’
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...