நன்றி குங்குமம்
ஒரே நாளில் சட்டீஸ்கரின் ஹீரோவாக உயர்ந்துவிட்டார் ஆசிரியர் ருத்ர ராணா. சட்டீஸ்கரில் கொரியா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது செயல் கல்வித்துறையில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. கொரோனா லாக்டவுனால் அங்கும் பள்ளிகள் இன்னமும் மூடிக்கிடக்கின்றன. ஆன்லைனில் படிக்கும் அளவுக்கு பெரும்பாலான மாணவர்களுக்கு வசதியில்லை. அதனால் மாணவர்களின் வீடுகளுக்கே பள்ளியைக் கொண்டு வந்துவிட்டார் ருத்ர ராணா. ஆம்; காலையில் எழுந்தவுடன் தனது பைக்கில் கரும்பலகையைக் கட்டிக்கொண்டு அங்குள்ள பல தெருக்களுக்கும் கிளம்பிவிடுவார் ருத்ரா.
ஏதாவது ஒரு தெருவில் பைக்கை நிறுத்தி மணி அடிப்பார். சில நிமிடங்களில் மாணவர்கள் அங்கே வந்து சேர்வார்கள். மாஸ்க் அணிந்த மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஒருவர் பின் ஒருவராக நிற்பார்கள். பள்ளியில் நடப்பதைப் போல பிரேயர் நடக்கும். பாடத்திட்டத்தைப் பின்பற்றி அன்றைய பாடத்தை நடத்தி அசத்துவார் ருத்ரா. இப்படி பல தெருக்களுக்கும் சென்று பாடம் நடத்துகிறார் இந்த ஆசிரியர்.
தொகுப்பு: த.சக்திவேல்