திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் ராஜேஷ் (36) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் பெற்று வழங்கும் பணியை செய்து வருகின்றார். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் பொருட்களை கணக்கெடுப்பு செய்வது வழக்கம். அதன்படி கடந்த 1ம் தேதி கணக்கெடுப்பு செய்த போது 33 செல்போன், 12 லேப்டாப். ஹார்டு டிஸ்க் 2, கீ போர்டு 2, மேஜிக் பேனா 2 உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அமேசான் மேலாளர் ராஜேஷ் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் திருவள்ளூர் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாபு (21) மற்றும் பூந்தமல்லி தேவதாஸ் நகரைச் சேர்ந்த திவாகர்(25) ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் பதமபாபி விசாரித்தில் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட பாபு மற்றும் திவாகர் அவர்களிடமிருந்து செல்போன் 33, லேப்டாப் 12, ஹார்டு டிஸ்க் 2, கீ போர்டு 2, மேஜிக் பேனா 2 என மொத்தம் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.