ஓசூர்: கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை திரும்ப பெறாததால் 29 பட்டியலின குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது உலகம் கிராமம். இந்த கிராமத்தில் 29 பட்டியலின ஆதி திராவிட குடும்பங்கள் உள்பட மற்ற சமுதாயத்தை சேர்ந்த மொத்தம் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த சூரியகுமார் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மற்றோரு சமுதாயத்தை சேர்ந்த சரளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர் கிராமத்தை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் பெண் வீட்டார் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தனது பெண்ணை கடத்தி சென்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி காலனிக்கு சென்று அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதானல் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி இதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் ஒன்றிணைந்து இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருவரையும் வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பெண் வீட்டார் வழக்கை வாபஸ் பெற்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வழக்கு திரும்ப பெறாத ஒரு காரணமாக தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் பலமுறை ஊர் பெரியவர்கள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ம் தேதி அந்த வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் அந்த 29 பட்டியலின குடும்பங்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு எந்த அத்தியாவசிய பொருட்களும் வழங்க கூடாது. அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது.
அவ்வாறு அவர்களோடு பேசினாலோ? மற்ற பொருட்கள் விநியோகம் செய்தாலோ? 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கப்படும் என தெரிவித்ததாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக இவர்கள் எந்தவொரு அத்தியாவசிய பொருட்களும் வாங்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.