டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஹத்ராஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் விசாரணை நடைபெற்றால் அது நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹத்ராஸ் வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க வகுத்துள்ள திட்டம் பற்றி விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்க உத்திரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விவரங்களை சேர்த்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹத்ராஸ் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் உத்திரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மாநில அரசு சார்பில் ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான விவரங்கள் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறையை தடுக்கவே பெண்ணின் உடல் அவரது பெற்றோர் சம்மதத்துடன் எரிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.