சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சார் புவனேஷ்வர் குமார், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி கடந்த வெள்ளிக்கிழமை விளையாடியது. அந்த போட்டியின்போது தனது 4வது ஓவரை வீச முடியாமல் சிரமப்பட்ட புவனேஷ்வர் (இன்னிங்சின் 19வது ஓவர்), உடற்தகுதி வல்லுநர்கள் ஆலோசனையின்படி அந்த போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் அந்த ஓவரின் எஞ்சிய 5 பந்துகளை கலீல் அகமது வீசினார். இந்நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொடையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதற்கு உரிய சிகிச்சை எடுக்கவும், ஓய்வு எடுக்கவும் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே ஐதராபாத் அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.