தாம்பரம்: சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதனை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாததால், குப்பையை பேரூராட்சி அதிகாரிகள் சிட்லபாக்கம் ஏரியின் அருகே கொட்டி வந்தனர். இதனால் ஏரியின் நீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அங்கு கொட்டப்பட்ட குப்பையை பேரூராட்சி ஊழியர்கள் அடிக்கடி தீயிட்டு எரித்து வந்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளானது. இப்பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என பொதுப்பணித் துறையினர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்று பெறாமல் பேரூராட்சி நிர்வாகம், மக்காத குப்பையை எரிக்க ரூ.45 லட்சம் செலவில் நவீன இயந்திரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சூற்றுச்சூழல் மாசுபடுவதுடன், குடியிருப்புகளில் புகை சூழும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு நவீன இயந்திரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துவதோடு, ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதையும், பேரூராட்சி நிர்வாகம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நல சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.