×

பக்கத்து வீட்டினரை அரிவாளால் வெட்டிய அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் கைது: பெரம்பூரில் பரபரப்பு

பெரம்பூர்: கேட் அமைக்கும் தகராறில் பக்கத்து வீட்டினரை அரிவாளால் வெட்டிய அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் சந்துரு (எ) ராமசந்திரன் (40). இவர், 68வது வட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காயத்திரிக்கும் (52) இடையே, தங்களது வீட்டின் அருகில் கேட் அமைப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் வழக்கம்போல் பிரச்னை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருவிக நகர்  போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, விசாரணைக்காக காவல் நிலையம் வரும்படி கூறிவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து காயத்திரியின் மருமகன் கிருஷ்ணகுமார் (32), அவரது நண்பர் ராஜசேகர் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அதிமுக பிரமுகர் ராமசந்திரன், அவரது மனைவி குணவதி (37), இவர்களது 17 வயது மகன் ஆகியோர் அடியாட்களுடன் அங்கு வந்து தகராறு செய்து, திடீரென அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கிருஷ்ணகுமார், அவரது நண்பர் ராஜசேகரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது நண்பர் ராஜசேகர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன், அவரது மனைவி குணவதி. இவர்களது 17 வயது மகன் மற்றும் தனசேகர் (37), ரஞ்சித் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், சிசிடிவி பதிவின் மூலம் இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : AIADMK ,neighbors ,Perambur , AIADMK leader arrested for slashing neighbors: Perambur riots
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...