×

ஊரடங்கு தளர்வுக்கு பின் ஓசூரில் புத்துயிர் பெற்ற ரோஜா நாற்று உற்பத்தி: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: ஓசூர் அருகேயுள்ள கிராமப்பகுதிகளில் கொரோனா காலத்தில் முடங்கிய ரோஜா நாற்று உற்பத்தி தொழில், ஊரடங்கு தளர்வை தொடர்ந்து புத்துயிர் பெற்று வருகிறது. இதனால், ரோஜா நாற்று உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அகலகோட்டை, மேடுமுத்துகோட்டை, ஒசட்டி, பாலதொட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரோஜா நாற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா நாற்றுகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், கொரோனா  தாக்கத்தால், ரோஜா நாற்று உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரோஜா செடிகளை வியாபாரிகள் வாங்க வராததால், பல்லாயிரக்கணக்கான செடிகள் பாரமரிக்க முடியாமல் குப்பையில் கொட்டப்பட்டது. இதனால், மலர் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களில் ஏராளமான விவசாயிகள், நர்சரி தொழிலை கைவிட்டு மாற்று தொழில்களுக்கு சென்றனர்.  இந்நிலையில், ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்து போக்குவரத்தை துவங்கியதால், அகலகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ரோஜா நாற்று தொழில் புத்துயிர் பெற்று வருகிறது. இதனால் மலர் விவசாயிகள், குடும்பத்துடன் ரோஜா நாற்று செடிகளை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த செடிகளை வாங்க, அகலகோட்டை கிராமத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வரத்தொடங்கியுள்ளனர். சென்னை போன்ற நகர பகுதிகளிலிருந்து, செடிகள் வாங்க தினந்தோறும் ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். கொரோனாவால் நொடிந்து விழுந்த ரோஜா நாற்று உற்பத்தி தொழில், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் கூலித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Hosur , Curfew relaxation, Hosur, rose, production, farmers
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு