பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெட்ரோ நகரில் வசித்து வருபவர் அழகர்சாமி. சினிமா வில்லன் நடிகரான இவர் வீட்டிலேயே ஈவென்ட் மேனேஜ்மென்ட் அலுவலகம் வைத்துள்ளார். இங்கு சங்கர், சதாம் உசேன் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் சாப்பிடுவதற்காக அலுவலகத்தை பூட்டி விட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் வில்லன் நடிகர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுபற்றி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மொபட்டில் முகத்தை மூடியபடி வந்த 2 பெண்கள், வில்லன் நடிகர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை தீ வைத்து எரித்த பெண்கள் யார்?, எதற்காக தீ வைத்தார்கள், முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.