×

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தாமதம் ஏன்?: அமைச்சர் காமராஜ் விளக்கம்

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏன்? என்பது குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு 1,918 வழங்கப்படும்.
மேற்கண்டவாறு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னனு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொள்முதல் பணி 1.10.2020 முதல் துவங்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாகும். எனவே, இன்று (நேற்று) அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு ஞாயிற்றுகிழமை அன்றும் (இன்றும்) அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591  நேரடி கொள்முதல் நிலையங்கள் அரசால் துவங்கப்பட்டுள்ளன. ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Kamaraj ,Direct Paddy Procurement Center , Paddy, Procurement, Farmer, Minister Kamaraj, Description
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...