×

அமைச்சர்கள் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தரவு: நாளை மறுதினம் முதல்வர் முக்கிய ஆலோசனை

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல்வர் எடப்பாடி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதிமுக முதல்வர் வேட்பாளர் வருகிற 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. வேட்பளரை அறிவிக்க இன்னும் 4 நாட்களே உள்ளது.

ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படாமல், மோதல் போக்கே தொடர்கிறது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வருகிற 6ம் தேதி சென்னை வர வேண்டும் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் நேற்று தகவல் வெளியானது. பின்னர் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டு விட்டது. இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அனைத்து அமைச்சர்களும் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து நாளை மறுதினம் (5ம் தேதி) சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 6ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, 7ம் தேதி (புதன்) அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ளார். அவர் 5ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. 5ம் தேதி முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

அப்போது சமரசம் ஏற்பட்டால் மட்டுமே 7ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியும் என்று அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறும்போது, வரும் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் என்றார். ெதாடர்ந்து நிருபர்கள் அவரிடம் எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே என்றபோது, என்னை 7ம் தேதி வரை காப்பாற்றுங்கள் என நிருபர்களிடம் கிண்டலாக வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Ministers ,Chennai ,Chief Minister , Ministers ordered to stay in Chennai for 3 days: Chief Minister's key advice tomorrow
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு