மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற மழைமலை மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அருள் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையாட்டி, 52ம் ஆண்டு அருள் விழா, கொரோனா ஊரடங்கு காரணமாக எளியமுறையில் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.இதில், 50 சதவீத பக்தர்கள் மட்டுமே திருத்தலத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆலய வளாகத்தில் அமைந்துள்ள விசுவாச கோபுரத்தில் இருந்து திருக்கொடி மந்திரிக்கப்பட்டு ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஆலய திருப்பலி நடக்கும் மையப்பகுதியில் கொடியேற்றம் நடந்தது.
செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயரின் பொதுபதில் குரு ஞா.பாக்கியரெஜிஸ், கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து விசேஷ திருப்பலி நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு கிருமிநாசினிகள், முழு கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற கோரி ஆலய நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.2ம் நாளான நேற்று திருவுடல் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இவ்விழா ஏற்பாடுகளை, அருட்தல அதிபர் லியோ எட்வின், அருள் தல ஆன்ம குரு ஜோசப் ஞானம், அருட்தல உதவி அதிபர் பிரவீன் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.