ஸ்ரீபெரும்புதூர்,: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ₹3.8 லட்சம் உள்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.இந்த அலுவலகத்தில் புது வாகன பதிவு, புதுப்பிப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதையாட்டி, வாகன பதிவு, புதுப்பித்தல் உள்பட பல பணிகளுக்கு அதிகளவில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஆர்டிஓ அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சென்றனர். பின்னர், அனைத்து நுழைவுவாயில்களையும் உள்பக்கமாக பூட்டிவிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், தரகர்கள் உள்பட பலர், தங்களிடம் இருந்த பணத்தை ஆங்காங்கே வீசியெறிந்துவிட்டு தப்பியோடினர்.பின்னர் ஆர்டிஓ சுதாகர் உள்பட 40க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் மாலை 6 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணிவரை விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஆர்டிஓ அலுவலகத்தில் கணக்கில் வராத ₹3.80 லட்சம் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, ஆர்டிஓ உள்பட அனைத்து ஊழியர்களும் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரித்துவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.