×

எழும்பூர், சென்ட்ரலில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே  வெளியிட்ட அறிக்கை: எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 7 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நெல்ைல  எக்ஸ்பிரஸ் (ரயில் 02631) நாளை முதல் தினமும் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக நெல்லை- எழும்பூர்  இடையே (ரயில் 02632) வருகிற 5ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 6.35 மணிக்கு வந்தடையும்.

மேலும்  சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் 02661) வருகிற 3ம் தேதி முதல் தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், திருச்சி, மதுரை, தென்காசி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து (ரயில்எண் 02662) மறுநாள் இரவு 6.10 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு காலை 6 மணிக்கு வந்தடையும்.
மேலும் சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் (ரயில் எண் 02613) நாளை முதல் செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கொடைக்கானல் ரோடு வழியாக மதுரைக்கு பிற்பகல் 12.20 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து (ரயில் எண் 02614) அன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக மதுரைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும்.

அதைப்போன்று சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே சிறப்பு (ரயில்எண் 02205) நாளை முதல் தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், அரியலூர், காரைக்குடி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் (02206) வருகிற 5ம் தேதி முதல் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும். அதைப்போன்று எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06723) வரும் 3ம் தேதி முதல் தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்கு மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லத்திற்கு சென்றடையும். அதைப்போன்று கொல்லத்தில் இருந்து ரயில் (06724) மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 8.10 மணிக்கு வந்தடையும்.

மேலும் சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா-சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (02639,02640) நாளை முதல் தினமும் இயக்கப்படுகிறது. அதைப்போன்று காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால் இடையே சிறப்பு ரயில் (06187, 06188)  வரும் 4ம் தேதி முதல் தினமும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே 13க்கும் மேற்ப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னாள் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.

Tags : Egmore ,Central ,Southern Railway Announcement , Operation of 7 additional special trains from Egmore to Central: Southern Railway Announcement
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...