திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், புதிய ரேஷன் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதன் கட்டிட பணியை எம்எல்ஏ இதயவர்மன் தொடங்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி வன்னியர் தெருவில் 9.8 லட்சத்தில் புதிதாக கட்டப்படும் ரேஷன் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக செயலாளர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் கலந்து கொண்டு, கட்டிடத்துக்கான பணியை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் வந்த எம்எல்ஏ, செயல் அலுவலர் திருஞானசம்பந்தத்தை சந்தித்து பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனை, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது, பெண்கள் அப்பகுதியி உள்ள குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். சாலை வசதி செய்ய வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.திமுக நிர்வாகிகள் சுகுமாரன், செல்வகுமார், சத்தியமூர்த்தி, செங்குட்டுவன், இளங்கோ, சரவணன், அழகிரி உள்பட பலர் உடன் இருந்தனர்.