சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தித்த 9 பள்ளிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 70 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் எனவும், அதில் 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூலிக்கலாம் எனவும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் என்றும் கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. பிறகு முதல் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளர் கே.ஜெயலலிதா சார்பில் கூடுதல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. அதில், விருதுநகரில் 3 பள்ளிகள், கோவை, பரமக்குடி, ராமநாதபுரம், சிவகாசி, திருவொற்றியூர், அம்பத்தூர் என 9 பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரிடம் இருந்து புகார் வந்துள்ளதா குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த 9 பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை என சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு உத்தரவிட்ட நீதிபதி புகார்களை பெற்று அதன் அடிப்படையில் அக்டோபர் 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு இம்மாத இறுதியில் முடிவடைய இருப்பதால் அதை நீடிப்பது குறித்து பள்ளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க போவதில்லை என்று நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.