சென்னை: சென்னைக்கு மீட்பு விமானங்களில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் நேற்று சோதனையிட்டனர். துபாயிலிருந்து வந்த விமான பயணிகளை சோதித்தபோது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில், அவரது உள்ளாடைக்குள் 430 கிராம் தங்கக்கட்டியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். மேலும், அவருடைய சூட்கேசிற்குள் மறைத்து வைத்திருந்த 5 ட்ரோன்கள், 2 ஐபோன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ₹33 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
இதேபோல், குவைத், கத்தார் விமானங்களில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் விருதுநகரை சேர்ந்த 2 பயணியிடமிருந்து மொத்தம் 570 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சம் என தெரிகிறது. பின்னர் சுங்க அதிகாரிகள் ஆந்திர பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.