தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் கால்வாய் அடைப்பால் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி அந்த பகுதி முழுவதும் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கிய பகுதி எதிரே நிலைய மருத்துவ அதிகாரி அலுவலகம், மருத்துவமனை முதல்வர் அலுவலகம் மற்றும் செவிலியர்கள் ஓய்வறை ஆகியவை உள்ளன. ஆனாலும், கால்வாய் அடைப்பை சீரமைக்கவும், தேங்கிய கழிவுநீரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் மருத்துவமனையின் ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, குடல் தொடர்பான சிறப்பு பிரிவு ஆகிய பகுதி அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து, அடிக்கடி மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.