தொண்டி : தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தற்போது மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நூலக துறையின் சார்பில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும் வாசகரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள நூலகத்திற்கு அதிகமான வாசகர்கள் இருந்து வந்தனர். கட்டிடம் மிகவும் சிதைவுற்று இடியும் நிலையில் உள்ளது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக வாசகர்கள் வருகை குறைந்துவிட்டது. நம்புதாளை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக காலியிடங்களாக உள்ளன. அந்த இடங்களில் புதிய கட்டிடங்களை கட்டி நூலகம், ரேஷன் கடை உள்ளிட்டவற்றை செயல்படுத்தலாம். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தவ்கித் ஜமாத் மாவட்ட செயலாளர் சேகு நெய்னா கூறுகையில், செல்போன் பயன்பாடு அதிகரிப்பிற்கு பிறகு மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. டாஸ்மாக் கடைகள் அமைக்க காட்டும் அக்கறையை அரசு நூலகத்திற்கு காட்டுவதில்லை. போதிய வசதி கட்டிட வசதி இல்லாததால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நம்புதாளையில் உள்ள நூலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பல வருடங்களாக உள்ளது. புதிய கட்டிடத்தில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.