ஒரத்தநாடு: தஞ்சை அருகே விவசாயிக்கு கொரியரில் வெடிகுண்டு பார்சல் வந்ததது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கண்ணந்தகுடி மேற்கு வடக்கு தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் அறிவழகன் (27). இன்ஜினியரிங் படித்து முடித்த இவர், தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அறிவழகனுக்கு திருச்சியிலிருந்து கொரியர் வந்துள்ளதாக ஒரத்தநாட்டில் உள்ள கொரியர் நிறுவனத்தில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து ஒரத்தநாடுக்கு சென்ற அறிவழகன் கொரியர் பார்சலை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் பார்சலை அறிவழகன் பிரித்து பார்த்தபோது பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வெடிகுண்டு மூலப்பொருட்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘திருச்சி தென்னூர் ஹைரோடு, 10.சி. வெள்ளாளர் தெரு, சி.கார்திரப்பன் என்ற முகவரியில் இருந்து பார்சல் வந்துள்ளது. இந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. பார்சலில் வெடிகுண்டு தயாரிக்கும் கனெக்டிங் டெட்டனேட்டர், ஜெலட்டின் இருந்துள்ளது. இது அபாயகரமான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களாகும். இதுபற்றி விசாரணை நடக்கிறது’ என்றனர்.