திருச்சி: கொரோனா காரணமாக மகாளய அமாவாசைக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டதால் காவிரி கரைகள் களையிழந்தன. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நேற்று கடை பிடிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகள், கடற்கரைக்கு வந்து நீராடி தர்ப்பணம் கொடுப்பர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டன.
அதன்படி, தர்ப்பணத்துக்கு புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பூட்டப்பட்டது. இது தெரியாமல் மக்கள் அதிகளவில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல், தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, திருவாரூர் கமலாலய குளம் ஆகிய இடங்களிலும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால், திருச்சி முதல் நாகை வரையிலான காவிரி கரைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதன்காரணமாக, இந்த ஆண்டு, காவிரி கரைகள் களையிழந்தன.