செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மனு அளித்தனர் செங்கல்பட்டு மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நடராஜபுரம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களில் சிலர் வழக்கறிஞர், மருத்துவமனை ஊழியர், செவிலியர்கள், சமூக ஆர்வலர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் சிலர், கடைகளில் அராஜக செயல்களில் ஈடுபடுவதாகவும், பணம் கொடுக்காத வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதன்பேரில், திருக்கழுக்குன்றம், சூனாம்பேடு ஆகிய காவல் நிலையங்களில், திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநங்கைகளின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த நடராஜபுரம் பகுதியில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில், ஒழுக்கமாக வாழும் திருநங்கைகளை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள், அராஜக செயல்களில் ஈடுபடும் திருநங்கைகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தவறு செய்யாத எங்கள் மீது போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வேண்டும். திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரி எஸ்பி கண்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்ட எஸ்பி, உடனடிநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.