×

ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க காலதாமதம்: விரல் ரேகை பதிய மறுப்பதால் முதியவர்கள் திண்டாட்டம்

நெல்லை: கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டு வரும் விரல்ரேகை பதிவுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடைகளில் சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்களின் கை விரல் ரேகை பதிய மறுப்பதால் அவர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக உணவு வழங்கல் துறை, ரேஷன் கடைகளில் காணப்படும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கார்டுகள் ஏற்கனவே மின்னணு மயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில் குடும்ப உறுப்பினர்கள் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆதார் கார்டு விபரங்களும் இணைக்கப்பட்டன. இதுதவிர பொதுமக்கள் வாங்கிய பொருட்கள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு தகவலாகவும் தரப்பட்டது.

இந்நிலையில் இம்முறையிலும் சிற்சில முறைகேடுகள் நடந்து வந்தன. அதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக தற்போது ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம் இம்மாதமே செயல்பாட்டுக்கு வந்து விட்டது. மற்ற மாவட்டங்களில் அடுத்து வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் காணப்படும் கைவிரல் ரேகை பதிவு மூலம் வெளியூருக்கு சென்ற ஒருவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படும். மேலும் ரேஷன் ஊழியர்களின் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்பதும் தடைப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கைவிரல் ரேகைக்காக புதிய இயந்திரங்கள் ரேஷன் கடைகளில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும்போது ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும். இல்லையெனில் பொருட்கள் வழங்கிட வாய்ப்பில்லை. பொது வினியோக முறைகேடுகளை தவிர்க்கும் இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் மாற்று கருத்தே இல்லை. இருப்பினும் இத்திட்டத்தில் சிற்சில குறைபாடுகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரல் ரேகை பதிவு என்பதன் அடிப்படையில் சிலரது விரல் ரேகையை பதிவு செய்ய 10 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் பின்னால் வருவோர் அதிக நேரம் காத்து நிற்க வேண்டியதுள்ளது. மேலும் முதியவர்கள் விரல் ரேகை, ஆதார் பதிவு ரேகையோடு சிலசமயங்களில் ஒத்து போவதில்லை. இதனால் அவர்கள் மறுதினம் வர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வயதான காலத்தில் அவர்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பயோமெட்ரிக் அடிப்படையிலான கைவிரல் ரேகை பதிவு சில ரேஷன் கடைகளில் அதிக காலதாமதத்தை உருவாக்கி வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் விரல் ரேகை பதிவு என்பது நோய் தொற்று பரவவும் வாய்ப்புகள் உள்ளன. இதை தடுக்க ரேஷன் கடைகளில் சானிடைசர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். பெற்றோர்கள் வர முடியாத சூழலில், 15 வயதிற்கு குறைவான குழந்தைகள் பொருட்கள் வாங்க சென்றால், அவர்கள் ரேகை பதிவிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. பயோமெட்ரிக் சிஸ்டம் அதை ஏற்க மறுக்கிறது. எனவே இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்.’’ என்றனர்.

Tags : ration shops , Corona, Ration Shop
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு