×

புளியங்குடி - சங்கரன்கோவில் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

புளியங்குடி: புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு செல்லும் மெயின் ரோடு வழியாக கோட்டமலை ஆறு தண்ணீர் செல்கிறது. இதில் முள்ளிக்குளம், நகரம், துரைசாமிபுரம் போன்ற ஊர்களுக்கு இந்த மெயின் குழாயில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் மெயின் குழாயில் இருந்து துரைசாமிபுரத்திற்கு சாலை கடந்து கொண்டு செல்லும் குழாய் உடைந்து விட்டது. இதனால் பல நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகிறது. தொடர்ந்து குடிநீர் வெளியேறி வருவதால் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் துரைசாமிபுரம் விலக்கு அருகில் சுமார் ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் அதன் ஆழம் தெரியவில்லை.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அந்த குழியில் விழுந்து காயமடைகின்றனர். விபத்தை தவிர்க்க அப்பகுதி மக்கள் பள்ளத்தில் கல்லை போட்டு சிறிய கம்பில் சிகப்பு துணியையும் கட்டி வைத்துள்ளனர். இருந்தும் இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் தவறி விழுந்து விடுகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் சாலையையும் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags : road ,Sankarankoil , Puliyangudi, Sankarankoil Road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி