ஊட்டி: ஊட்டியில் கொரோனா பரிசோதனை மையம் மற்றும் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் துவக்கி வைத்தார்.நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2100ஐ கடந்துள்ளது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.இதனிடையே ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே கொரோனா பரிசோதனை மையம் மற்றும் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இன்ட்கோ சர்வ் தலைமை செயல் அலுவலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்து, கொரோனா பரிசோதனை மையம் மற்றும் நடமாடும் வாகனத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்படும் முறைகளை பார்வையிட்டனர். நடமாடும் கொரோனா தடுப்பு பரிசோதனை வாகனம் மூலம் நோய் கட்டுபாட்டு பகுதிகள் மற்றும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நோய் கட்டுபாட்டு பகுதியில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) 3 நடமாடும் தொற்று வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் மத்திய பஸ் நிலையம் அருகில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. நமது மாவட்டத்தில் முக்கிய இடங்களான பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பரிசோதனை எளிதாகவும், இலவசமாகவும் செய்து கொள்ள முடியும்.எனவே பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தாமாக முன்வந்து இங்கு இலவசமாக பரிேசாதனை செய்து கொள்ளலாம். என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஊட்டி உதவிஆட்சியர் மோனிகா ரானா, சுகாதார பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுச்சாமி ஊட்டி நகராட்சி ஆணையர் சரஸ்வதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் முருகேசன், ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.