சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே காந்திநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் 10ம் தேதியான இன்று வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். புதிய கடை திறப்பு கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த பெண்கள் தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் கொண்டு வந்தனர். இதை பெண் போலீசார் பறித்தனர். அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் குடிமகன்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டதால் குடிமகன்கள் 30க்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.