×

குண்டும் குழியுமான ஓரிக்கை புறவழிச்சாலை: காஞ்சி சுற்றுவட்டார மக்கள் அவதி

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் வழியாக வந்தவாசி, செய்யாறு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் காஞ்சிபுரம் நகருக்குள் வராமல் செல்ல ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் பெரியார் நகரில் இருந்து மிலிட்டரி சாலை வழியாக செவிலிமேடு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  இதுபோல் சின்ன ஐய்யங்குளம், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினர் அத்தியாவசிய தேவைக்காகவும், பணி காரணமாகவும் காஞ்சிபுரம் செல்வதற்கு ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓரிக்கை புறவழிச்சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக பைக்கில் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, குண்டும், குழியுமான ஓரிக்கை புறவழிச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Kanchi , Orikai Bypass, Kanchipuram
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...