சென்னை: கொலம்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் எட்வின் என்ரிக்யூ (32). இவர் துபாயிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் கடந்த 2015 ஜூன் 22ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எட்வின் விமான நிலையம் வந்ததும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, மார்கர் பேனாவில் 2.5 கிலோ கிராம் ேகாகைன் போதைப் பொருளை கடத்தி வந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் எட்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.தேன்மொழி முன்பு நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட எட்வினுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து எட்வினை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.