திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு யானை ஒன்று வாயில் பலத்த காயத்துடன் காணப்பட்டது. வலி பொறுக்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நின்ற அந்த யானை, கும்கி யானைகள் மூலம் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக அது பரிதாபமாக இறந்தது. இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. காட்டுப் பன்றிக்கு அன்னாசி பழத்தில் வைத்த வெடிகுண்டை சாப்பிட்டபோது, அந்த குண்டு வெடித்து யானை காயம் அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் தமிழக, கேரள எல்லையில் உள்ள அகளி வனப்பகுதியில், தந்தங்கள் இல்லாத ஆண் மக்னா யானை ஒன்று வாயில் பலத்த காயங்களுடன் சுற்றிக் கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அந்த யானையை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்து சிகிச்சை அளித்தனர். பின்னர், அந்த யானை தமிழக பகுதிக்கு சென்று விட்டது. தற்போது, அட்டப்பாடி வனப்பகுதியில் அந்த யானை இறந்த நிலையில் கிடந்தது. வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக, உணவு சாப்பிட முடியாமல் பசியால் வாடி யானை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.