சென்னை: தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் கண்தானம் செய்துள்ளனர். இதன்படி அதிக அளவில் கண்தானம் செய்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 65 லட்சம் பேர் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்துள்ளனர். இதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இந்நிலையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப். 8ம் தேதி வரை கண்தான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
கண்தானம் என்பது இறந்தவரின் கண்களில் உள்ள கருவிழியை மட்டும் எடுத்து பார்வை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும். இந்நிலையில் பார்வை இழப்பு குறைக்கவும் கண்தானம் தொடர்பான பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு தேசிய பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பொது நோக்கம் கண் தேவைப்படுவோர் இங்கு பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசு சார்பில் மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கண்களை தானமாக அளிக்க விரும்பினால் இந்த சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்நிலையில் பொதுமக்கள் இணையதளம் மூலம் கண்தானம் அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. பொதுமக்கள் www.hmis.tn.gov.in/eye-donor இணையதளம் மூலம் பதிவு செய்து கண்தானம் அளிக்கலாம். இந்நிலையில் இந்தியாவில் அதிக கண்தானம் அளித்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 2016 - 2017 முதல் 2020ம் ஆண்டு மார்ச் வரை தமிழகத்தில் 43 ஆயிரத்து 391 பேர் கண்தானம் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் 33 ஆயிரத்து 248 பேர் கண்தானம் செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தில் 30 ஆயிரத்து 105 பேர் கண்தானம் அளித்துள்ளனர்.