சென்னை: உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நீட் தற்கொலையால் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவன் மாணவன் விக்னேஷ்.
19 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வை ஒத்தி வைக்கக் கோரி பலரும் வழக்குகள் தொடர்ந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று மட்டும் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்தது. இந்நிலையில்,நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும். மேலும் மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்; எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; தற்கொலை எண்ணத்தை விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.