×

5 மாதங்களுக்கு பிறகு சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்: கிருத்திகையையொட்டி குவிந்தனர்

சென்னை: சிறுவாபுரி முருகன் கோயிலில், 5 மாதங்களுக்கு பிறகு கிருத்திகையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து பல்வேறு நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் அனைத்தும் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இதனால், வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் கோயில்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில், பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு நேற்று செவ்வாய் கிழமை மற்றும் கிருத்திகை என்பதால், பெரியபாளையம், ஆரணி, திருவள்ளூர், சென்னை, செங்குன்றம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்தனர். இதனால், பக்தர்கள் சமூக இடைவெளியின்றி கூட்ட நெரிசலுடன் தரிசனம் செய்தனர். மேலும், இந்த கோயிலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்ததால், அவர்கள் விஐபி தரிசனம் செய்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தாமதமானது. இதனால், மேலும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

Tags : Devotees ,Krithika ,Siruvapuri Murugan Temple , After 5 months, devotees gathered at Siruvapuri, Murugan Temple, Krithika
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...