திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் கோட்டகத்தை சேர்ந்த சிலர், கடந்த தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த காந்தி என்ற பெண், கட்சி மாறியது குறித்து தரக்குறைவாக பேசியதாகவும், இதனால் அதிமுகவை சேர்ந்த சிலர், காந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காந்தி தனது தரப்பினரிடம் கூறியுள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் உருட்டு கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், எதிர்தரப்பை சேர்ந்த 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆலிவலம் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.