சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 1.5 லட்சம் கட்டிடங்களுக்கான சொத்து வரி குறைவாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது, மாநகராட்சி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கணக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு புவிசார் தகவல் தொழில்நுட்ப வரைபடம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன் முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் அனைத்து சொத்துகளையும் கண்டறியும் வகையில் ட்ரோன் முறையில் வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணி முடிந்து வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணி நடைபெற்றது. இதன் முடிவில் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1.5 லட்சம் கட்டிடங்களுக்கான சொத்துவரி குறைவாக கணக்கீடு செய்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதன்படி தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள 1.50 லட்சம் சொத்துகளின் வரி குறைவாக உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த சொத்துகளை மீண்டும் ஆய்வு நடத்தி புதிதாக சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காலத்தில் எவ்வாறு இந்த ஆய்வை மேற்கொள்ள முடியும் என்று பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், “கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தீவிரமாக செய்து வருகிறோம். தற்போது சொத்து வரி ஆய்வு பணிகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா பயத்தால் பலர் வீடுகளுக்கு உள்ளே தங்களை அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் எப்படி சொத்துகளை ஆய்வு செய்ய முடியும்.” என்றனர்.