×

இந்தோ - திபெத் படையில் உலகில் முதல்முறையாக அதிரடி 1... 2... 3... அட்டாக்! எதிரிகளை குதறித்தள்ள ‘தாக்குதல் நாய் படை’

புதுடெல்லி: இந்தோ- திபெத் காவல் படைக்குப் புதிய வரவாகத் ‘தாக்கும் நாய்கள்’ படை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் போலீஸ் முதல் ராணுவம் வரை, மோப்ப நாய்கள் படை பயன்படுத்தப்படுகிறது. போதை பொருட்கள், வெடிகுண்டுகளை கண்டறிதல், குற்றவாளிகளை பிடித்தல், விபத்து நடந்த இடங்களில் இடிபாடுகளில் உயிருடன் சிக்கி இருப்பவர்கள் அல்லது இறந்து கிடக்கும் மனிதர்களை காப்பாற்றுதல், மீட்பது உட்பட பல்வேறு வேலைகளை இந்த மோப்ப நாய்கள் செய்கின்றன. ராணுவத்தில் பொதுவாக வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளை கண்டறியவும், பதுங்கியிருக்கும் எதிரி படையினரை கண்டு பிடிக்கவும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தோ -  திபெத் காவல்படையிலும் இந்த நாய்கள் படை இருக்கிறது.

தற்போது, இந்தோ - திபெத் துணை ராணுவப்படையில் புதிதாக, அதிபயங்கரமான நாய் படை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன் பெயர், ‘தாக்கும் நாய்கள் படை.’ எல்லையில், காட்டுப் பகுதிகளில் ரோந்து செல்லும் வீரர்களுக்கு இந்த நாய்ப்படை உதவியாக இருக்கும் வகையில், இவற்றுக்கு தனித்துவமான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. எதிரிகளை கண்டுபிடித்து கடித்து  குதறுவதுதான், இவற்றின் ஒரே பணி. அதுவும், குழுவாக செயல்பட்டு தாக்குதல் நடத்தும் வகையில் அவற்றுக்கு ஆக்ரோஷமான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக, சண்டிகரில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் இருந்து இந்த நாய்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. முதற் கட்டமாக 30 நாய்கள் கிழக்கு லடாக்கின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளன. எதிரியைத் தேடுவதற்கும், பின் தொடர்ந்து கண்டுபிடிப்பதற்கும், துரத்துவதற்கும், தாக்கிக் கீழே தள்ளுவதற்கும், உத்தரவு பிறப்பித்தால் உடனே தாக்கி அழிக்கும் விதமாக இந்த நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நாய் படையின் தாக்குதல் கேட்டாலே குலை நடுங்க வைக்கும் வகையில் இருக்கிறது. அவற்றின் தாக்குதல் இப்படித்தான் இருக்கும்…!

1 இந்த தாக்கும் நாய்கள் படையில் குறைந்தப்பட்சம் 5 நாய்கள் இடம் பெறும்.
2 வீரர்கள் ‘அட்டாக்’ என உத்தரவிட்டதும், இவை 5ம் ஒன்றாக இணைந்து எதிரிகளைத் தாக்கும்.
3 இந்த படைக்கு ஒரு நாய் தலைமை வகிக்கும். மற்ற 4 நாய்கள், 2 குழுவாக பிரிந்து செயல்படும்.
4 தலைமை வகிக்கும் நாய், பதுங்கி இருந்து திடீரென எதிரி நாட்டு வீரரின் மேல் தாவி கழுத்துப் பகுதியை கடித்துக் கீழே சாய்க்கும்.
5 மற்ற 4 நாய்களும் 2 குழுவாக இணைந்து எதிரியை கடித்து குதறி கபளீகரம் செய்யும்.
6 இந்த 5 நாய்கள் கொண்ட படையின் தாக்குதல் உத்தி, உலகின் எந்த ராணுவத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
7 இந்த தாக்குதல் படையில் பெல்ஜியம் மலினாய்ஸ், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் இடம் பெற்றுள்ளன.
8 இந்த தாக்குதல் படை ஒருவரை பிடித்து விட்டால் கடித்து குதறி பிறகு, அவரை சுற்றி அரண் போல் சுற்றி நின்று தப்பிக்க விடாமல் செய்யும்.
9 தனது எஜமானர்கள் வந்து கட்டளையிட்டால் மட்டுமே, அவரை அவரிடம் ஒப்படைத்து விட்டு விலகி நிற்கும். - கேட்டாலே சும்மா அதிருதுல்ல...

இருளில் மட்டுமே பதுங்கி தாக்கும்
* எதிரி நாட்டுப் படையினர் இந்த நாய்களை கண்டறிய முடியாத வகையில், இருளான பகுதியில் மட்டுமே இந்த நாய் படை செயல்படுத்தப்படும்.
* இந்தோ - திபெத் காவல் படையில் ஏற்கனவே ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* இந்தோ -திபெத் எல்லைப் படை, 1962ல் உருவாக்கப்பட்டது. இதில், 90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
* இந்தியா - சீனா இடையிலான 3,488 கிமீ எல்லையை பாதுகாப்பதே இதன் கடமை.
* இதன் வீரர்கள் உயரமான மலைப் பகுதியில் தாக்குதல் நடத்தும் சிறப்பு திறன் படைத்தவர்கள்.

Tags : time ,world ,Indo-Tibetan Army ,Attack Dog Force ,Attack , Indo-Tibetan Force, World's First Action, 1 ... 2 ... 3 ... Attack! , ‘Attack Dog Force’ to chase down enemies
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா