கொழும்பு: இலங்கை அருகே தீ விபத்தில் சிக்கிய கச்சா எண்ணெய் கப்பலில் காயமடைந்த மாலுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். இதர 22 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 2 லட்சத்து 60 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் பாரத்துடன் தி நியூ டைமன் என்ற சரக்கு கப்பல் குவைத்து நாட்டின் மினா அல் அகமதி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பாரத் துறைமுகத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இலங்கை அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென கப்பலானது தீ விபத்தில் சிக்கியது. அதாவது இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 38 கடல் மையில் தொலைவில் நேற்று கப்பல் வந்தபோது, கொதிக்கலனில் ஏற்பட்ட வெடிப்பால், தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தீ விபத்து தகவல் கிடைத்ததும், இலங்கை கப்பற்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, சரக்கு கப்பலில் தவித்த ஊழியர்கள் 22 பேரை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதற்கிடையில் தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாலுமிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உரிழந்தார். இதனையடுத்து சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய விமானப்படை விமானங்கள், போர் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் 18 பேரும், கிரேக்க நாட்டினர் 5 பேரும் பணியில் இருந்ததாக இந்திய கப்பல் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் கடலில் கலக்காத வகையில் இந்திய கடற்படையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.