பெங்களூரு: போதை பொருள் வழக்கில் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததற்காக கன்னட நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் பெங்களூருவில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட பல போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த துணை நடிகை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசியல் அதிகாரி ரவிசங்கர் என்பவர் பிரபல நடிகர், நடிகைகளுக்கும் போதை பொருள் கும்பலுக்கும் நடுத்தரகராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் பலர் போதை மருந்து பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அச்சமயம் நடிகை ராகினி திவேதி இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராகினி திவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பலமுறை நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் நடிகை ராகினி ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராகினி திவேதியை கைது செய்திருக்கிறார்கள். தற்போது அவர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது திரை உலகமே படப்பிடிப்பு இல்லாமல் முடங்கி கிடந்தது. இந்நிலையில் கொரோனா காலத்தை பயன்படுத்தி திரை உலகினருக்கு அதிக அளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.