புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக டோக்ரி, காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கbhரோனா தடுப்பு பணிகள், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழிகள் மசோதா 2020ஐ பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக டோக்ரி, காஷ்மீரி, உருது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நிண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதேபோல் வெளிநாடுகளுடனான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்று, ஜவுளித்துறைக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையிலான தர மதிப்பீட்டு முறை தொடர்பான ஒப்பந்தம். இரண்டாவது, சுரங்கத்துறை பின்லாந்து இடையிலான ஒப்பந்தம், மூன்றாவது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை-டென்மார்க் இடையிலான ஒப்பந்தம். இதேபோல் சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்திற்கும் (மிஷன் கர்மயோகி) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளை அரசு ஊழியர்கள் கற்றுக்கொள்வதுடன், இந்திய கலாச்சாரத்திலும் உறுதியாக இருப்பார்கள், என்று கூறியுள்ளார்.