டெல்லி : மாஸ்கும், தனிமனித இடைவெளியும் இந்தியாவில் 2 லட்சம் மரணங்களைத் தடுக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.
விதவிதமான முக கவசங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 66 ஆயிரத்தை தாண்டியது. குணமடைதோர் எண்ணிக்கை 29,01,908 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,01,282 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பிலும் 3ம் இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் மாஸ்க் அணிதலையும், தனிமனித இடைவெளியையும் கடைபிடித்தால் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் 2 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.