×

செயின் பறிப்பை தடுக்க முயன்றபோது பெண் காவலர் முகத்தை கத்தியால் கிழித்த ஆசாமி: எழும்பூரில் பரபரப்பு

சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யவதனி (32). உளவுத்துறையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம்  இரவு, பணி முடிந்து திருவல்லிக்கேணியில் இருந்து சக பணியாளர் யாஷ்மின் என்பவருடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டை கூவம் கால்வாய் அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற சூர்யவதனி  கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். அவர், சத்தம் போட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.பின்னர், தனது கணவர் ஆட்ேடாவில் அழைத்து செல்ல எதிரே வருவதாக கூறிய சூர்யவதனி, எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே  மொபட்டில் இருந்து இறங்கிக் கொண்டார். பிறகு காந்தி இர்வின் பாலம் வழியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி நடந்து சென்று  கொண்டிருந்தார்.

அப்போது, அதே மர்ம நபர்கள் மீண்டும் அங்கு வந்து, சூர்யவதனியை வழிமறித்து, அவர் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். அவர்  ‘நான் போலீஸ் என்னை விடுங்கள்’ என்று கூறி சத்தம் போட்டார்.  இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், அவரது முகத்தில் கடுமையாக தாக்கி  சிறிய கத்தியால் முகத்தை கிழித்துவிட்டு, செயினை பறிக்க முயன்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பினர்.காயமடைந்த பெண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி  போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.
அதில், பெண் காவலரை கத்தியால் கிழித்து விட்டு தப்பியது சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வழிப்பறி ஆசாமி ரஞ்சித் (26) என்பது தெரிய வந்தது.  அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Tags : Asami ,guard ,Egmore ,stir , When , prevent, chain, flushing Female ,guard,knife,
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...