டெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டு 796 சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் முதன்மை தேர்வு ஜனவரி 8, 2021 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை யுபிஎஸ் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csp_2020/ என்ற இணையதளம் வழியாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.