சென்னை : அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது துரோகம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும். இந்த நிலையில் ஏழைகளுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச மாஸ்க் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தற்போது தரமற்ற குறைந்த விலை மாஸ்க் விநியோகம் செய்யப்படுவதாகவும், முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்காமல் விலகியதால், அனுபவம் இல்லாத போலி கம்பெனிகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விரைவாக விநியோகம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இல்லாத நிறுவனத்தை உருவாக்கி டென்டர் விட்டதால் ரேஷன் கடைக்கு இன்னும் இலவச முகக்கவசம் வரவில்லை-வருவதும் பேப்பர் அளவில் தரமற்று உள்ளதாகச் செய்தி வருகிறது. எதைத் தொடங்கினாலும் ஊழல் முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது துரோகம், என சாடியுள்ளார்.