திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகரின் நீராதாரங்களாக பெரிய தெப்பக்குளம், சின்ன தெப்பக்குளம், அம்மன் குளம், மலையடிக்குட்டை ஆகியவை விளங்குகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், நகரில் உள்ள குளம், குட்டைகள் அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. நகராட்சி 17 வது வார்டு சந்தைப்பேட்டை அருகேயுள்ள பெரிய தெப்பக்குளம், நகர மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க, விஜயநகர பேரரசு காலத்தில் சங்ககிரியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த திரியம்பக உடையார் என்பவரால், கடந்த 1512ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் தூர்ந்துபோன பெரிய தெப்பகுளத்தை தூர்வாரி, தெப்பத்தேர் நடத்த, நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் துவக்கப்பட்டன. பணிகள் துரிதமாக நடந்த வேளையில் தெற்குபுற கரையில் உள்ள கட்டிடங்கள் சம்பந்தமான பிரச்னை காரணமாக, நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதனால் தூர்வாரும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பெரிய தெப்பக்குளம், நகராட்சியின் 4 வார்டுகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது. நகராட்சி சார்பில் முள்வேலி அமைத்து பாதுகாப்பு செய்திருந்தாலும், சிலர் குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டி வருவதால் நீர் மாசுபட்டுள்ளது. ெதப்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. மரம், செடிகள் முளைத்து புதர் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது.
அதேபோல், 14 ஏக்கர் பரப்பளவில் இருந்த அம்மன் குளம் தூர்க்கப்பட்டு, அங்கு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு புறத்தில் மழைநீர் சேகரிப்பு குளமாக அம்மன் குளம் மாறிவிட்டது. இதனை சுற்றிலும் நகராட்சி கம்பி வேலி போட்டிருந்தாலும், வீடுகள் மற்றும் வர்த்தக கடைகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் மலையடிக்குட்டை அமைந்துள்ளது. மழை பெய்யும் போது அர்த்தநாரீஸ்வரர் மலையில் இருந்து வரும் மழைநீரால், மலையடிக்குட்டை நிரம்பும். நகர பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளுக்கு டூவீலர், சைக்களில் எடுத்துச்சென்று பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மலையடிக் குட்டையில் துணிகளை துவைப்பதுடன், குப்பை கழிவுகளையும் கொட்டுவதால் நீர் மாசடைந்துள்ளது. திருச்செங்கோடு நகரில் உள்ள பெரிய மற்றும் சின்ன தெப்பக்குளம், அம்மன் குளம், மலையடிக்குட்டை ஆகியவற்றை அதிகாரிகள் முறையாக தூர்வார, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாகும்.